நான் தமிழை நேசிப்பவன். தமிழர்களை நேசிப்பவன். மனிதத்தை நேசிப்பவன். காதலைக் காற்றாய்ச் சுவாசிப்பவன்.
தமிழகத் தமிழர்களாக இருந்தாலும், தமிழீழத் தமிழர்களாக இருந்தாலும், மலேசியத் தமிழர்களாக இருந்தாலும், சாதியால் ஒடுக்கப்படுகிற தொல் தமிழர்களாக இருந்தாலும், தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் வாழ்வுரிமை, மனித உரிமை, அரசியல் உரிமைகளுக்காக எனது எளிய எழுத்தை ஈந்த அடியார்க்கு அடியவன். தொண்டரடிப் பொடியவன்.
குறிப்பாக தமிழீழத் தமிழர்களின் தாயக மீட்புக்கான அரசியல் மற்றும் களப் போராட்டம் வெல்ல வேண்டும் என்ற நிலைப் பாட்டிலும், மற்றும் தமிழீழத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் நான் என்றும் உறுதியான மாறாத நிலைப்பாடு கொண்டவன். ஆனால் நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவனல்ல.
இருப்பினும், சமூக - உளவியல், கலை-பண்பாட்டுத் தளங்களில் இருந்தும், சமயம் கடந்த தமிழர் (வட மொழியில் : திராவிடர்) தொல்லியல் அடிப்படையிலான தமிழ் மொழியினத் தன்ணுணர்வு அடிப்படையிலும், பெரியாரியல் - அம்பேத்கரியல் நோக்கிலும் - தமிழர் மேம்பாட்டிற்காகவும், வெற்றிக்காகவும் நான் கருத்துக்களைக் கூறிடும் போது, அதைத் தங்களுக்கு எதிரான கருத்தாக தமிழர்கள் சிலர் எண்ணிக் கொண்டால் அது அவர்களது அறியாமை !
இந்நிலையில், நான் சமூக அரசியல் கருத்துக்கள் குறித்து எழுதுவதை நிறுத்தி விட்டது ஏன் என்று சிலர் வினா எழுப்பி மடல் வரைந்திருக்கிறார்கள்.
நான் பொருள் – தொழில் வாழ்விலும், காதல் - அக வாழ்விலும், கலை - இலக்கிய ஆழ்விலும் முனைந்திருப்பதால் எனது எளிய சமூக அரசியல் எழுத்துக்களை நிறுத்தி வைத்திருக்கிறேன். இருப்பினும், தமிழ் மொழியினில் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் எளிய மருத்துவக் கையேடுகளைக் கொணர்ந்து தமிழை அறிவியல் மொழியாக ஆக்குவதற்கு என் பங்கையாற்ற செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர ஆங்கிலத்திலும் பெண்களுக்கான மருத்துவ இதழ் ஒன்றைக் கொணர முயன்று வருகிறேன்.
(குறிப்பு: திராவிடர் என்றச் சொல் அதன் வடமொழிப் பொருளான தமிழர் என்ற பொருள்படவே பயன்படுத்தப் படுகிறது. அதாவது தமிழர் என்ற சொல்லை ஆங்கிலத்தில் "டமிலியன்" (Tamilian) அல்லது "டமில்" (Tamil) என்று கூறுவதைப் போல வட மொழியில் "ட்ராவிட" (திராவிட) என்ற சொல் பயன் படுத்தப் படுகிறது. இது அம்பேத்கரியல் அடிப்படையிலான கூற்று. எனவே “திராவிட” என்றச் சொல்லை தென்னிந்தியர் என்ற பொருள்பட பயன்படுத்துவது தவறு.
தொல் தமிழ் பேசிய மொகஞ்சா தாரோ – ஹராப்பா நாகரீக மக்கள் துவங்கி ஆரியக் கலப்பால் தமிழ் மொழியை இழந்து புது மொழிகளைப் பெற்று விட்ட இந்தியாவில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை தமிழ் தொல்லின வழி மக்கள் “people of Indian Tamilian racio-anthropological origin” என்றுதான் குறி்ப்பிட வேண்டும். இது அம்பேத்கரியல் அடிப்படையிலான கூற்று.