Sunday, 10 August 2008

நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத நல்ல மனிதர்.



என் மதிப்பீட்டில் திரு. ரஜினிகாந்த் நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத நல்ல மனிதராக இருக்கிறார். கர்நாடகாவில் ஒகனேக்கல் குடி நீர் திட்டத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு தமிழர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது அதை எதிர்த்து தீவிரமாக எழுதிய நான், அதே சமயத்தில் தீபிகா படுகோனே படத்தைப் போட்டு தமிழர்களைத் தாக்காத தீபிகா போன்ற கர்நாடகா வாழ் மக்களுக்கு எதிராக எந்த கருத்தையும் கூறவில்லை என்று விளக்கமும் கொடுத்திருந்தேன். அதே விளக்கத்தைத் தாமதமாக ரஜினி இப்போது தந்திருப்பதால், அவரின் இந்த நியாயமான விளக்கத்தை மற்றவர்கள் "மன்னிப்பாக" தவறான முறையில் சித்தரிக்க அவர் இடமளித்து விட்டாரென்றாலும், அவரின் இந்த விளக்கத்தில் தவறெதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை; அவர் தமிழர்களைத் தாக்கியவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விட்டாரென்று சொல்வது முற்றிலும் தவறு மட்டுமல்லாமல் அவர் சொன்ன கருத்தைத் திரித்துக் கூறுவதாகும். ரஜினி செய்த ஒரே தவறு இந்த விளக்கத்தைத் தாமதமாகத் தந்திருப்பது. அதுவும் தனது படத்தை கர்நாடகாவில் வெளியிடும் பொருட்டுக் கூறி இருப்பதால், அவரின் இந்த நியாயமான விளக்கத்தை மற்றவர்கள் தவறான முறையில் சித்தரிக்க இடமளித்து விட்டார்.



திரையில் பேசப்படும் வசனத்தைச் சரியான நேரத்தில் (timing) பேசி கைதட்டல் வாங்கும் அவர் நிஜ வாழ்க்கையில் குறிப்பாக குறிப்பாக அரசியல் ரீதியான மக்கள் பிரச்சினை குறித்த விளக்கத்தை நேரந்தவறி "timing" பிசகி கூறியிருப்பதால் அவரது தாமதமான ஆனால் சரியான விளக்கத்தை மற்றவர்கள் தமிழ் நாட்டின் சுய மரியாதையை பாதிக்கும் மன்னிப்பாக தவறாக சித்தரிப்பதற்கு இடமளித்து விட்டார்!

ஆனால் இதை அவர் வேண்டுமென்றே செய்யவில்லை. கர்நாடகாவில் அவர் படம் குறித்து பிரச்சினை எழுந்த பொழுது இயல்பாக பேசியிருக்கிறார். இதை அப்படி செய்யாமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமாக அவர் கூறி இருந்தால் இவ்வாறு அவர் கருத்து திரித்து கூறப்படாமல் தடுத்து இருக்கலாம்.




கர்நாடகாவில் அவர் படம் குறித்த பிரச்சினையை நிவர்த்திக்க பண்பு கருதி அவர் கூறிய கருத்து, தமிழ் நாட்டின் தன்மான பிரச்சினையாக மாற்றப்படும் என்று துளியும் அரசியல் மனம் இல்லாத அவர் எதிர்பார்த்து இருக்க மாட்டார்!




அரசியலில் அல்லது மக்கள் பிரச்னையில் அவர் "டைமிங்" தவறி பேசுவதில் இருந்தே அவர் அரசியல் மனம் இல்லாத நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத அப்பாவி என்பதை நிருபித்து விட்டார். அவர் சொன்னதில் டைமிங் தவறி இருக்கிறதே ஒழிய கருத்தில் பிழையில்லை!